கிளிநொச்சியில் உள்ள இரணைமடு குளம் தொடர்பில் விசாரணை நடத்த மூவரடங்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைகழக பொறியியல் பீட விரிவுரையாளர் சுப்பிரமணியம் சிவகுமார் தலைமையில் வடக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் (பொறியியல்) எஸ். சண்முகநாதன், வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் சிவகுமார் ஆகியோர் அடங்கிய குழுவையே நேற்று (வௌ்ளிக்கிழமை) நியமிக்கப்பட்டுள்ளது.
கடந்த 21 ஆம் திகதியளவில் பெய்த கடும் மழையின் போது இரணைமடு குளத்தின் நீர் கொள்ளளவு பெருமளவில் உயர்ந்த போதும் குளத்தின் வான் கதவுகள் உரிய நேரத்தில் திறக்கப்படாததன் காரணமாக வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டது.
இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கவே இந்த விசாரணை குழுவை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் பிரதமர் தலைமையில் இடம்பெற்ற வெள்ளப் பாதிப்புக்கள் தொடர்பான விசேட கூட்டத்தின் போது வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்கட்சி தலைவர் தவராசா இரணைமடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள குழுவென்றை அமைக்குமாறு கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

