சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்ற இரு யாத்திரிகள் மீது கற்கள் சரிந்ததால், காயமடைந்த இருவரும் டிக்கோயா கிளங்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தங்கல்ல மற்றும் கணேமுல்ல பகுதியை சேர்ந்த 26, 27 வயதுகளுடைய ஆண் ஒருவரும், பெண் ஒருவருமே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.
சிவனொளிபாதமலைக்கு சென்று யாத்திரைகளை மேற்கொண்டு மீண்டும் திரும்பும் போது, சிவனொளிபாதமலை – நல்லதண்ணி பிரதான பாதையில் “மஹாகிரிதம்ப” எனும் இடத்தில் இவ்வாறு பாரிய சத்தத்துடன் கற்கள் சரிந்துள்ளது.
இதனையடுத்து, கற்களுக்குள் சிக்கிய இருவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
காயமடைந்த இருவரையும் யாத்திரைக்கு சென்ற சிலர் மஸ்கெலியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். அதன் பின்னர் மேலதிக சிகைச்சைக்காக அங்கிருந்து டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சிவனொளிபாதமலை பகுதியில் “மஹாகிரிதம்ப” எனும் இடத்தில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் மண்சரிவு ஏற்பட்டிருந்தது. அதே இடத்தில் மீண்டும் கற்கள் சரிந்துள்ளதாக யாத்திரிகள் தெரிவிக்கின்றனர்.

