தொடர் விடுமுறையால் திருமலையில் ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் நேற்று சுவாமி தரிசனம் செய்ய 14 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்தனர்.
சனி, ஞாயிறு மற்றும் நேற்று கிறிஸ்மஸ் விடுமுறை என தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருமலையில் குவிந்தனர். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திருமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. நேற்றும் கூட்டம் அதிகரித்ததால் திருமலையில் உள்ள வைகுண்டம் கொம்ப்ளக்ஸில் 31 அறைகளும் நிரம்பி கோயிலுக்கு வெளியே சுமார் 2 கி.மீ தூரம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
இதனால் சர்வ தரிசனத்தில் பக்தர்கள் சுவாமியை தரிசிக்க 14 மணி நேரம் வரை காத்திருந்தனர். ரூ.300 சிறப்பு தரிசனம், திவ்ய தரிசனத்திற்கு 3 மணி நேரமானது. பக்தர்களின் கூட்டம் அதிகரித்ததால் லட்டு பிரசாதம் வாங்கவும் தலைமுடி காணிக்கை செலுத்தவும் பொதிகளை பெற்றுக்கொள்ளவும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. தங்கும் விடுதிகளும் கிடைக்காத காரணத்தினால் பலர் கடும் குளிரில் அவதிப்பட்டனர். நேற்று முன் தினம் ஒரேநாளில் ஏழுமலையான் உண்டியலில் பக்தர்கள் ரூ.3.24 கோடியை காணிக்கை செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

