யோகா கற்பிக்கும் இந்திய – சீனக் கல்லூரி மேலும் 50 புதிய கிளைகளை அந்நாட்டில் துவங்க உள்ளது. சீனாவில் பல்வேறு உடற்பயிற்சி கல்லூரிகள் உள்ளன. ஜிம்னாஸ்டிக் போன்றவற்றுக்கும் கல்லூரிகள் உள்ளன. இந்நிலையில் பிரதமர் மோடி பீஜிங்கிற்கு சென்றபோது சீன அதிபரிடம் யோகாவின் வளர்ச்சியை பற்றி பேசியிருந்தார். குறிப்பாக, சீனாவில் கடந்த சில ஆண்டுகளில் யோகா பிரபலமாகியிருந்ததை சுட்டிக்காட்டியிருந்தார்.
இதையடுத்து, இந்திய ஆசிரியர்களுடன் கூடிய யோகா கல்லூரியை அங்குள்ள யுனான் பல்கலைக்கழகத்தில் துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனையடுத்து முதன் முதலாக கடந்த 2015-ம் ஆண்டு சீனாவின் யுன்னான் மாகாணத்தில் இந்தியா-சீனா யோகா கல்லூரி திறக்கப்பட்டது.
அந்த கல்லூரிக்கு சீன மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இதைத் தொடர்ந்து சீனாவில் யோகா கற்போரின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்தது. வரவேற்பு அதிகரித்துள்ளதால், சீனாவின் பல்வேறு மாகாணங்களில் யோகா கலையைக் கற்பிக்கும் 50 புதிய கிளைகளைத் தொடங்கவிருப்பதாக அந்நாட்டு அரசு தமது அதிகாரப்பூர்வ ஊடகம் மூலம் அறிவித்துள்ளது.

