அமெரிக்க அதிபராக பதவி வகிக்க டொனால்ட் டிரம்ப் தகுதி இல்லாதவர் என அவரால் பணி நீக்கம் செய்யப்பட்ட உளவுத்துறை இயக்குனர் குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை எனப்படும் எப்.பி.ஐ. இயக்குனராக ஜேம்ஸ் காமே பணியாற்றி வந்தார்.
அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் அலுவலக ரகசியம் தொடர்பான முக்கிய கடிதங்களை அதிகாரப்பூர்வ அலுவலக மின்னஞ்சல் மூலம் கையாளாமல் தனது தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரி வாயிலாக பரிமாறி வந்ததாக முன்னர் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை விசாரிக்க தவறி விட்டதாக தேர்தல் பிரசாரத்தின்போது டிரம்ப் கூறிவந்த நிலையில் தேர்தலுக்கு 11 நாள் முன்னதாக இதுதொடர்பான விசாரணைக்கு ஜேம்ஸ் காமே உத்தரவிட்டார்.
பின்னர், தேர்தலில் வெற்றிபெற்ற டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவி ஏற்றதும் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் ஜேம்ஸ் காமே-வை எப்.பி.ஐ. இயக்குனர் பதவியில் இருந்து பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபராக பதவி வகிக்க டொனால்ட் டிரம்ப் தகுதி இல்லாதவர் என அவரால் பணி நீக்கம் செய்யப்பட்ட உளவுத்துறை இயக்குனர் ஜேம்ஸ் காமே குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக, அமெரிக்காவின் பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், டிரம்ப் மருத்துவ ரீதியாக இந்நாட்டின் அதிபராக பதவி வகிக்கும் தகுதி உடையவர்தானா? அல்லது, அவர் ஞாபகமறதி நோயின் ஆரம்பக்கட்டத்தில் இருக்கிறாரா? என்னும் சர்ச்சைக்குள் போக நான் விரும்பவில்லை என்றார்.
நமது நாட்டின் மரியாதை மற்றும் அடிப்படை சித்தாந்தங்களுக்கு அதிபர் மதிப்பளிக்க வேண்டும் என்றும் மிக முக்கியமாக உண்மையானவராக இருக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் டிரம்ப்பால் இவற்றை கடைபிடிக்க இயலாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.













