ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 4 வது டெஸ்ட் போட்டியில் 492 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்க அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றது.
தென்னாப்பிரிக்கா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4 வது டெஸ்ட் போட்டி ஜோஹன்னஸ்பெர்க் மைதானத்தில் நடைபெற்றது. மூன்று போட்டிகள் முடிவில் 2-1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா முன்னிலை வகிக்க, தொடரைச் சமன் செய்ய இந்தப் போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் டிம் பெய்ன் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி களம்கண்டது.
போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 488 ரன்களும் ஆஸ்திரேலியா 221 ரன்களும் எடுத்தன. இதையடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு ஃபாலோ ஆன் கொடுக்காமல் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, 105 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டூப்ளெசிஸ் 120 ரன்களும் தொடக்க வீரர் டீன் எல்கர் 81 ரன்களும் எடுத்தனர். பவுமா 35 ரன்களுடனும் பிலாண்டர் 33 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளும் நாதன் லியோன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 612 ரன்களைத் தென்னாப்பிரிக்கா இலக்காக நிர்ணயித்தது. இமாலய இலக்கை நோக்கிக் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்திருந்தது.