நாங்கள் இராணுவத்தை ஒட்டு மொத்தமாகக் குறை கூறவில்லை. அதில் கடமையாற்றிய காவாலிகள் சிலரை அடையாளப்படுத்தவேண்டும் என்றே கேட்கின்றோம். இவ்வாறு வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
மக்களுக்கெடுத்துக் கூறும் கூட்டத் தொடரின் ஆரம்பக் கூட்டம் தமிழ் மக்கள் பேரவை ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று மாலை நடத்தப்பட்டது. அதில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவித்தாவது-,
அந்தக் காவாலிகளை வீரதீர சூரர்கள், சிங்கள மக்களின் காவல் மன்னர்கள் என்ற வகையில் கொழும்பு அரசில் உள்ள பலர் காப்பாற்ற விளைந்துள்ளார்கள். எமது நெருக்குதல்களால் காவாலிகள் கடைத் தெருவுக்கு இழுத்து வரப்படவேண்டும் என்று கருதுகின்றோம். அதைச் செய்ய நாம் மக்கள் இயக்கமாக ஒருங்கிணைந்து முன்னேற வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
எமது பார்வை சரியென்று கருதும் யாவரும் எம்முடைய மக்கள் இயக்கத்துடன் இணைந்து அரசுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நெருக்குதல்களை ஏற்படுத்த முன்வரவேண்டும்.