தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படத்துடன், புதுவருட வாழ்த்துக்களை ஃபேஸ்புக்கில் பகிர்ந்த குற்றச்சாட்டில் கைதான இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் நேற்று (திங்கட்கிழமை) கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களை எதிர்வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரபாகரனின் புகைப்படம், தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சினை உள்ளடக்கிய 2018 புதுவருட வாழ்த்து அட்டைகளை இரு இளைஞர்கள் தங்கள் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த இருவரும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். 2007ஆம் ஆண்டின் 66ஆம் இலக்க சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் விதிவிதானங்களுக்கு அமைவாக இவ்விருவரும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.













