Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

3 மாதங்களில் 1000 குழந்தைகள் மரணம்: தடுக்க முடியாதது ஏன்?

October 14, 2017
in News, World
0

அனைத்து விடயங்களுக்கும் ஒரு எல்லையோ முடிவோ இருக்கும் என்பது உண்மையாக இருந்தாலும், சிலவற்றுக்கு விதிவிலக்கும் உண்டு. ஆனால் விதிவிலக்குகள் நேர்மறையாக மட்டுமே இருப்பதில்லை.உதாரணமாக, இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் பாபா ராகவ்தாஸ் மருத்துவக் கல்லூரியில் குழந்தைகள் இறந்து போவது என்பது அன்றாட நிகழ்வாகிவிட்டது. இது முடிவில்லாத அவலமாகத் தொடர்கிறது.

பி.ஆர்.டி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் குழந்தைகள் மரணிப்பது 30 ஆண்டுகால தொடர் நிகழ்வாக இருந்தாலும் தற்போது அது உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது.

மூன்று மாதங்களில் சுமார் 1000 குழந்தைகள் மரணம்

இந்த மருத்துவக் கல்லூரியில் கடந்த மூன்று மாதங்களில் குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை ஆயிரமாக அதிகரித்துவிட்டது. ஆகஸ்ட் மாதத்தில் 378 குழந்தைகள் இறந்தனர்.

அப்போது, ‘ஆகஸ்ட் மாதத்தில் குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருப்பது வழக்கமானது’ என்று உத்தரப்பிரதேச மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சித்தார்த்நாத் சிங் தெரிவித்திருந்தார்.

ஆனால் செப்டம்பர் மாதத்தில் இறப்பு எண்ணிக்கை 433 ஆக உயர்ந்தது. அக்டோபர் மாதத்தில் 12ஆம் தேதி வரை 175 குழந்தைகள் இறந்துள்ளன.

குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்த ஆகஸ்ட் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் 36 பச்சிளம் குழந்தைகள் இறந்தபோது ஆக்சிஜன் விநியோகம் தடைபட்டதே அதற்கு காரணம் என்றும் கூறப்பட்டது.நிலைமை மோசமடைந்தபோது உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் எடுத்த நடவடிக்கைகளால் மருத்துவக் கல்லூரியின் அப்போதைய முதல்வர் ராஜீவ் மிஸ்ரா மற்றும் அவருடைய மனைவி உட்பட 9 பேர் சிறைக்கு சென்றனர்.

அதிகாரிகள் குழு, உயர் நீதிமன்ற விசாரணை என பல்வேறு நிலைகளில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. சிகிச்சை அளிப்பதற்காக வெளியில் இருந்தும் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர், நிலைமை சீர்செய்ய முயற்சிகள் செய்யப்பட்டாலும், குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை மட்டும் குறையவேயில்லை.

மரணத்திற்கான காரணம் மூளை வீக்க நோய் மட்டுமா?

அந்தப் பகுதியில் பல ஆண்டுகளாக தொடரும் என்சிபாலிட்டிஸ் எனப்படும் மூளை வீக்க நோயின் பாதிப்பால், குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் இறப்பதாக நம்பப்படுகிறது. இருந்தாலும் இந்த ஆண்டு இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணம் மூளைவீக்க நோய் மட்டுமே அல்ல.

ஏனெனில் இந்த ஆண்டு கிட்டத்தட்ட 2000 குழந்தைகள் இறந்திருக்கின்றனர். அதில் வெறும் 333 குழந்தைகள் மட்டுமே மூளை வீக்க நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

மருத்துவக் கல்லூரியின் சிறப்பு சிகிச்சைகளுக்கான மருத்துவர் ரமாஷங்கர் ஷுக்லாவின் கருத்துப்படி, ”பச்சிளம் குழந்தைகளே அதிகளவில் இறந்துள்ளன. மாநிலத்தில் எட்டு மாவட்டங்களில் தொலைதூர கிராமங்களில் வசிக்கும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளை சிகிச்சைக்காக கொண்டு வருவதற்கு ஏற்படும் தாமதம்தான் உயிரிழப்புகள் அதிகரிக்க காரணம்.”இதுபோன்று இறப்புகள் நடைபெறுவது முதல்முறை அல்ல என்றும், ஆண்டுதோறும் அவசர சிகிச்சை பிரிவில் சிசுக்கள் மரணிப்பது வழக்கமானதுதான் என்றும் சொல்கிறார். ஆனால் இந்த ஆண்டுதான் இதுகுறித்து அதிகமாக விவாதிக்கப்படுகிறது என்கிறார் அவர்.

வசதி குறைவான மருத்துவமனை

முப்பது ஆண்டுகளாக பி.ஆர்.டி மருத்துவக் கல்லூரியில் பணியாற்றிய மருத்துவர் ஏ.கே.ஸ்ரீவாத்சவ் சொல்கிறார், “உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் பெரும்பாலான கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள், சிகிச்சைக்காக இந்த மருத்துவ கல்லூரியையே நம்பியிருக்கின்றனர். நிலைமை மிகவும் மோசமான பிறகுதான் குழந்தைகளை இங்கு கொண்டுவருகின்றனர். காலதாமதமே பச்சிளம் குழந்தைகளுக்கு எமனாகிவிடுகிறது.”மருத்துவக்கல்லூரி தனது சக்திக்கு அதிகமாகவே இங்கு வரும் நோயாளிகளை சமாளிக்கிறது. தினசரி புறநோயாளிகளாக மட்டும் இங்கு 2500 நோயாளிகள் வருகின்றனர். 950 படுக்கை வசதி கொண்ட இங்கு, தங்கியிருந்து சிகிச்சை பெறும் உள்நோயாளிகளின் எண்ணிக்கையோ மிகவும் அதிகம்.

அதிலும் குறிப்பாக குழந்தைகள் பிரிவு மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் நிலையோ மிகவும் மோசமாக இருக்கிறது. சில சமயங்களில் ஒரே படுக்கை மூன்று குழந்தைகளுக்கு ஒதுக்கப்படுகிறது. நோய்வாய்ப்பட்ட மூன்று குழந்தைகள் ஒரே படுக்கையில் படுக்க வைக்கப்பட்டிருப்பதை காண்பது இங்கு இயல்பானது.

மற்ற கட்டமைப்பு வசதிகளும் இப்படித்தான் இருக்கிறது. “தொழில்முறை திறன்கள் மற்றும் தரநிலைகள் மேம்படுத்தப்படாத வரை, இங்கு குழந்தைகளின் தொடர் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியாது” என்று பி.ஆர்.டி மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்த மருத்துவர் குஷ்வாஹா சொல்கிறார்.

பி.ஆர்.டி மருத்துவக் கல்லூரியின் நிலைமையை மேம்படுத்துவதோடு, தொலைதூர கிராமங்களில் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனைகள் அமைப்பது, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பயிற்சி பெற்றவர்களை பணியமர்த்துவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்கிறார் குஷ்வாஹா.

பிராத்தனைகள்

பி.ஆர்.டி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இருக்கும் அரச மரத்தின் முன்பும், அத்தி மரத்தின் முன்பும் மக்கள் கைகளை கூப்பி பிராத்தனை செய்கின்றனர். குழந்தைகள் நலம் பெற வேண்டும் என பெற்றோரும், உற்றாரும் சிவப்பு கயிறுகளை கட்டி வேண்டிக் கொள்கின்றனர்.மரங்களில் கயிறு கட்டி பிராத்திக்கும் நடைமுறை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியதாக பி.ஆர்.டி மருத்துவக் கல்லூரிக்கு அருகில் காண்டீன் நடத்தும் சிண்ட்டு சொல்கிறார். மக்கள் நெரிசல் அதிகரித்துக் கொண்டே செல்வதால், அவ்வப்போது இங்கு கட்டப்படும் வேண்டுதல் கயிறுகளை அகற்ற வேண்டியிருப்பதாக சிண்ட்டு சொல்கிறார்.

பிராத்தனை கயிறுகளை அகற்றுவதுபோல், பச்சிளம் குழந்தைகளின் மரணத்திற்கான காரணங்களையும் அகற்ற வேண்டியதுதான் தற்போதைய அத்தியாவசியத் தேவை.

Previous Post

போரை சந்திக்க அமெரிக்கா தயாராக இருக்க வேண்டும்!

Next Post

உயிலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது இறந்த ஒருவரின் SMS

Next Post
உயிலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது இறந்த ஒருவரின் SMS

உயிலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது இறந்த ஒருவரின் SMS

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures