இன்று நடைபெறவுள்ள இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான நான்காவது சர்வதேச ஒருநாள் போட்டியின் போது விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ள போட்டியின் போது 1,000 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
5 போட்டிகள் கொண்ட போட்டியில் 3 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் 3 போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வியை தழுவியிருந்தது. கடந்த மூன்றாவது போட்டியின் போது இரசிகர்கள் போத்தல் மற்றும் ஏனைய பொருட்களால் மைதானத்தில் உள்ள இலங்கை அணி வீரர்களை தாக்க முயற்சி செய்தனர். இதனால் போட்டி அரைமணி நேரம் இடைநிறுத்தப்பட்டது.
இந்த நிலையிலேயே, நாளை இடம்பெறவுள்ள நான்காவது போட்டியின் போது விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
CCTV கமெராக்கள் பொருத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் அறிவித்துள்ள அதேவேளை, மைதானத்துக்கு எதாவது பொருட்களை வீசுவார்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என அறிவித்துள்ளனர்.
இதேவேளை, நான்காவது போட்டியை அமைதியான முறையில் பார்வையிட்டு அமைதியை பேணுவதற்கு உதவியளிக்குமாறு இரசிகர்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

