2016 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அகதிகள் எண்ணிக்கை இலக்கை ஈட்ட முடியும்!-கனேடிய அரசு நம்பிக்கை.
கனடாவினுள் அனுமதிக்கப்படும் சிரிய அகதிகளின் எண்ணிக்கை 2016 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இலக்கை அடைய முடியும் என கனேடிய அரசு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
லிபரல் அரசு ஆட்சிக்கு வந்தபின்னர் ஏறத்தாழ 19,000 சிரிய அகதிகள் அரச ஆதரவுத் திட்டத்தின் மூலமும் (government-sponsored), 10.800 சிரிய அகதிகள் தனியார் ஆதரவுத் திட்டத்தின் மூலமும் (privately-sponsored) கனடாவிற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தொகை 30,000 ஐ வெகுவிரைவில் எட்டிவிடும்.
இந்த வருட இறுதிக்குள் அரச ஆதரவின் மூலம் அனுமதிக்கப்படும் அகதிகளின் எண்ணிக்கையை 25,000 ஆக்குவதே லிபரல் அரசின் திட்டமாகும்.
அரச ஆதரவின் கீழ் கனடாவிற்குள் அனுமதிக்கப்பட்டுள்ள அகதிகளின் எண்ணிக்கையை ஜனவரி 1, 2017 இல் 25,000 ஆக்க வேண்டுமெனில், இனி உள்ள காலத்தில் மாதமொன்றுக்கு 1,210 அகதிகள் வீதம் ஏற்றுக் கொள்ளப்படவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.