வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களில் 11 பேர் மன்னார் முசலியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
“யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 403 பேரின் மாதிரிகள் பி சி ஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட போதே 14 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்களில் 4 பேர் முசலி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் முசலியில் அண்மையில் கொரோனா நோயால் உயிரிழந்தவருடன் தொடர்புடையவர்கள்.
மேலும் 7 பேர் முசலி வாடியில் தொழில் செய்பவர்கள். அண்மையில் முசலி வாடியில் தொழிலாளி ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டவருடன் தொடர்புடைய மேலும் 7 பேரே இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி கரைச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியா செட்டிக்குளம் வைத்தியாலையில் சேர்க்கப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கூறினார்.

