தனிமைப்படுத்தல் நடவடிக்கை நாட்டின் 9 காவல்துறை பிரிவுகளில் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதன்படி, கொழும்பு மாவட்டத்தின் 6 காவல்துறை பிரிவுகளும் கொஸ்கம, அவிசாவளை, ருவன்வெல்ல மற்றும் காத்தான்குடி ஆகிய காவல்துறைபிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன், நாடு முழுவதும் 60 கிராம சேவையாளர் பிரிவுகள், வீதிகள் மற்றும் தொடர்மாடிக் குடியிருப்புகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதி காவல்துறை மா அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 31 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர காலப்பகுதியில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியினை தவிர்த்து செயற்பட்டவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில்கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 2 ஆயிரத்து 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பாதுகாப்பு முகக் கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியினை கடைபிடித்தல்போன்ற விதிமுறைகளை மீறி செயற்படுபவர்கள் தொடர்பில் தொடர்ந்தும் அவதானம் செலுத்தப்படும் எனவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.

