பிரித்தானியாவில் புதிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டுடனான விமான சேவையை இடைநிறுத்துவதா இல்லையா என்பது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படலாம் என அறிய முடிகின்றது.
புதிய கொரோனா தொற்று தொடர்பாக சர்வதேச நாடுகள் மத்தியில் எச்சரிக்கை அதிகரித்துள்ள நிலையில் 40 இற்கும் மேற்பட்ட நாடுகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளும் இந்தியா, கனடா போன்ற நாடுகளும் விமான பயணத்தை இரத்து செய்துள்ளன.
இதேவேளை எதிர்வரும் டிசெம்பர் 26 ஆம் திகதி முதல் பிரித்தானியாவில் இருந்து வருபவர்கள் உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையங்களைத் திறக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்நிலையில் விமான நடவடிக்கைகள் தொடர்பான முடிவுகள் சுகாதார அதிகாரிகளால் விரைவில் எடுக்கப்படும் என விமான சேவைகள் நிறுவனத்தின் பிரதித் தலைவர் ராஜீவ் சூரியாராச்சி ஆங்கில ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
அத்தோடு செவ்வாய் பிரித்தானியாவில் இருந்து 26 பேர் நாடு திரும்பியுள்ளனர் எனவும் விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

