கல்முனை பிரதேசத்தில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக உயர் மட்ட கலந்துரையாடல் நேற்று (17) கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் தலைமையில் மாநகர சபை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கல்முனை பிரதேசத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக காணப்படும் நிலையில் நேற்று கல்முனையில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டு அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் மேலும் தொற்றாளர்களை இனங்காண்பதற்காக நாளை முதல் கல்முனை சாஹிரா கல்லூரி வீதியில் இருந்து கல்முனை வாடி வீதி வரையில் உள்ள வீதிகள் மற்றும் சகல வர்த்தக நிலையங்கள், அரச தனியார் மற்றும் நிறுவனங்கள், கல்முனை சந்தை, கல்முனை பஸார் உட்பட சகல நிறுவனங்களையும் இன்று வெள்ளிக்கிழமையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வரை முழுமையாக பொது மக்களை வீடுகளிலே தங்கி இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் இவ் உயர் மட்ட குழு கூடி தொடர்ந்தும் இவ் நிலையினை நீடிப்பதா? இல்லையா? என முடிவு எடுக்கப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

