யாழ்ப்பாணம் நகர் பகுதியில் கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள வெதுப்பகம், மின்சார நிலைய வீதியில் உள்ள மேலும் ஒரு புடவை விற்பனை நிலையம் என்பவற்றை மூடுவதற்கு யாழ் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பாலமுரளி அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்று மறு அறிவித்தல் வரை இன்று பிற்பகல் முதல் மூடப்பட்டது. அதனுடைய முன்பக்க வாயிலைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆயினும் வெதுப்பகத்தை இயக்கி உற்பத்திப் பொருள்களை மாற்று வழியூடாக விநியோகிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நவம்பர் 21ஆம் திகதி வெதுப்பக விற்பனையகத்தில் பணியாற்றிய அத்தனை பேரும் தனிப்படுதலுக்கு உள்படுத்தப்படவுள்ளனர். திருநெல்வேலியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான யாழ்.வைத்தியசாலையும் மறு அறிவித்தல்வரை சேவைகளை இடைநிறுத்தப் பணிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மின்சார நிலைய வீதியில் உள்ள மேலும் ஒரு புடவை வியாபார நிலையம், யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் நவீன சந்தை கட்டடத் தொகுதியில் உள்ள புத்தக நிலையமும் அதிகாரிகளால் மூடப்பட்டுள்ளது. அத்துடன் யாழ்ப்பாணம் மாநகரில் மூன்று வீடுகளுக்கு அவர் சென்று வந்த நிலையில் அந்தக் குடும்பங்களும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு 7 நாள்களின் பின்னர் பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படும். அதன் பெறுபேற்று அறிக்கை கிடைத்த பின் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.

