முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் கற்குவாரி பகுதியில் நேற்று முன்தினம்(26) காலை கைக்குண்டு ஒன்று வெடித்துள்ளது.
குறித்த கைக்குண்டு எவ்வாறு வெடித்தது என்பது தொடர்பாக நேற்றைய தினம் (26) தடயவியல் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
மேலும் குறித்த பகுதியில் வேறு வெடி பொருட்கள் ஏதேனும் உள்ளனவா என்பது தொடர்பில் சோதனைகளை மேற்கொண்டனர்.
இதன்போது குறித்த பகுதியில் இருந்து மேலும் ஒரு கைகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதோடு குறித்த குண்டு உள்ளூர் பகுதியில் தயாரிக்கப்பட்டது எனவும் இந்த குண்டு அண்மையில் பளை பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் குறித்த வீட்டில் இருந்த குண்டுகளை ஒத்ததாக காணப்படுவதாகவும் அறிய முடிகின்றது என தடயவியல் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறான நிலையில் குறித்த குண்டுகள் எவ்வாறு இப் பகுதிக்கு வந்தன என்பது தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
இதேவேளை நேற்று (27) அதிகாலை 5.30 தொடக்கம் காலை 10 மணிவரை குறித்த பகுதியில் இருக்கின்ற வீடுகள் அனைத்திலும் இராணுவத்தினர் விசேட அதிரடிப்படையினர் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

