மாலபே தனியார் மருத்துவக்கல்லூரி தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகளை தீர்ப்பதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று இரண்டாம் நாளாக பல பகுதிகளில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பினை முன்னெடுக்கவுள்ளது.
நேற்று முன்தினம் முதல் முன்னெடுத்துவரும் தொடர்ச்சியான பணிப்பகிஷ்கரிப்பின் இரண்டாம் நாளாக இன்றைய தினத்தில் வவுனியா, மாத்தறை, மாத்தளை, அம்பாறை, பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தினை மேற்கொள்ளவுள்ளதாகவும் அச்சங்கத்தின் செயலாளர் வைத்தியர் நவீந்த டி சொய்ஷா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சைட்டம் மாலபே தனியார் மருத்துவக்கல்லூரி விவகாரம் குறித்தும் அதில் காணப்படுகின்ற குறைபாடுகள் தொடர்பிலும் சகல மட்டத்திற்கும் தெரியப்படுத்தியுள்ளோம். இதுவரையில் குறித்த பிரச்சினைக்கான தீர்வினை அரசாங்கம் முன்வைக்கவில்லை.
இதில் எழுந்துள்ள நடைமுறை சிக்கல் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையொன்றினை தயாரிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையானது சிலரின் அரசியல் தேவைப்பாடுகளுக்கமைய மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி சட்டரீதியானது என்பதை காட்டுவதற்கு முயற்சிக்கின்றது. எனவேதான் இதற்கு எதிராகவும் சைட்டம் மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை தடைசெய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.
மாவட்ட ரீதியில் சுழற்சி முறையில் சகல வைத்தியசாலைகளிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் எதிர்வரும் 15 ஆம் திகதி வரையில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம். இதன்போது வேலைநிறுத்தம் இடம்பெறும் மாவட்டங்களின் வைத்தியசாலைகளில் சைட்டம் எதிர்ப்பு பதாகைகள் மற்றும் கறுப்புக்கொடி என்பனவும் பறக்கவிடப்படும். அத்துடன் இது தொடர்பில் மாவட்ட ரீதியில் மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளோம் என்றார்.
குறித்த வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பானது நேற்று முன்தினம் திங்கட்கிழமை முதல் முன்னெடுக்கப்படுகின்றது. அதன்படி நேற்று முன்தினம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, திரு கோணமலை, மட்டக்களப்பு, நுவரெலியா அம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப் பட்டிருந்த நிலையில் குறித்த மாவட்டங்களில் மருத்துவ நடவடிக்கைகள் ஸ்தம் பித்ததையடுத்து அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்திருந் தனர். இன்றைய தினம் இரண்டாம் கட்ட மாக வவுனியா, மாத்தளை, அம்பாறை, பதுளை, மாத்தறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப் படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
