ஓர் அணியின் வரலாறு… அடையாளம்… தனி மனிதன் ஒருவரின் கையில் கொடுக்கப்படுகிறது. அந்த நாட்டில் வேறு எந்த அணிக்கும் இல்லாத சிறப்பு அது. அதை அப்படி எந்த அணியும் எளிதில் ஒரு தனி நபருக்குக் கொடுத்துவிடாது. ஆனால், அர்செனல் கொடுத்திருக்கிறது. பிரீமியர் லீகில் எந்த அணியும் கொண்டிருக்காத ‘invincibles’ கோப்பையை அர்சென் வெங்கர் கைகளில் கொடுத்துவிட்டது அர்செனல். ஏன்..? அதை அவர்தான் வென்று கொடுத்தார் என்பதற்காக அல்ல. உலகின் ஒவ்வொரு மூளையிலும் இந்த லண்டன் கிளப்பின் லோகோவில் இருக்கும் பீரங்கியின் சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறதென்றால் அதற்குக் காரணம் அவர்தான். அந்த அணிக்கு அவர் அடையாளம் மட்டும் கொடுக்கவில்லை, ஒரு வரலாற்றையும் கொடுத்துள்ளார். அணியின் வரலாற்றை வடிவமைத்தவருக்கு அந்தக் கோப்பை பெரிய விஷயமல்ல. ஆனால், அது அவர் கைகளை அலங்கரித்தபோது எமிரேட்ஸ் அரங்கில் எழும்பிய அந்த கோஷம்… 60,000 ரசிகர்களின் ஆரவாரம், பலகோடி ரசிகர்களின் கண்ணீர்… அதுபோதும்! #MerciWenger
அர்சென் வெங்கர் – 22 ஆண்டுகளாக ஓர் அணியின் பயிற்சியாளராக இருந்து சரித்திரம் படைத்தவர். அதிக பிரீமியர் லீக் போட்டிகளில் பயிற்சியாளராக இருந்தவர் என்ற சாதனை படைத்தவர். இதையெல்லாம் தாண்டி, தன் சொந்த ரசிகர்களாலேயே பயங்கரமாக வெறுக்கப்பட்டவர். கடந்த நான்கைந்து ஆண்டுகளில், எவரும் சந்திக்காத விமர்சனங்களைச் சந்தித்தவர். உலகின் பல்வேறு தரப்பட்ட கால்பந்து ரசிகர்களால் கேலி கிண்டல் செய்யப்பட்டவர். கடந்த 3 ஆண்டுகளாக இதையெல்லாம் பொறுத்துக்கொண்டிருந்தவர், மேனேஜர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார். இத்தனை நாள்கள் எமிரேட்ஸ் அரங்கில், அவருக்கு எதிராக ‘Wenger Out’ என்று பதாகை பிடித்தவர்கள், இப்போது ‘நன்றி வெங்கர்’ (Merci Wenger) என்று உணர்ச்சிகளைக் கொட்டிக்கொண்டிருக்கின்றனர். உலகுக்கு இது பிரிவு உபசாராமாகத்தான் தெரியும். ஆனால், கால்பந்து காதலர்களுக்குத் தெரியும் அவரை எப்படிக் கொண்டாடவேண்டுமென்று. ஏனெனில், அந்த 22 ஆண்டுகளும் அவர் வெற்றிகளுக்காக உழைக்கவில்லை. அவர் எதிர்பார்த்ததும், கொடுத்ததும், கொண்டாடியதும் கால்பந்தின் அழகியல் மட்டுமே!