இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் 2016 -17 மற்றும் 2017 18 சீசனுக்கான சிறந்த சர்வதேச வீரராக தேர்வு செய்யப்பட்ட கேப்டன் விராத் கோஹ்லி, பாலி உம்ரிகர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். பெங்களூருவில் நேற்று நடந்த வண்ணமயமான விழாவில் கடந்த 2 சீசன்களுக்கான சிறந்த வீரர், வீராங்கனைகள் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இந்திய ஆண்கள் அணி கேப்டன் கோஹ்லி 2 சீசனிலும் சிறந்த சர்வதேச வீரராக தேர்வு செய்யப்பட்டு உயரிய பாலி உம்ரிகர் விருது வழங்கப்பட்டது.மகளிர் அணி கேப்டன் ஹர்மான்பிரீத் கவுர் 2016-17 சீசனுக்கான சிறந்த வீராங்கனையாகவும், தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 2017 18 சீசனுக்கான சிறந்த வீராங்கனையாகவும் விருது பெற்றனர். ரஞ்சி கோப்பை உட்பட உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள், நடுவர்கள் மற்றும் போட்டிகளை சிறப்பாக நடத்திய கிரிக்கெட் சங்கங்களும் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன. பிசிசிஐ நிர்வாகக் குழு தலைவர் வினோத் ராய் விருதுகளை வழங்கி கவுரவித்தார். இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் பட்டோடி நினைவு சிறப்புரையாற்றினார்.