வவுனியாவில் கொரோனா தனிமைப்படுத்தலுக்குட்பட்ட குடும்பங்களுக்கு அரசால் எந்தவிதமான நிவாரணங்களும் வழங்கப்படாதமையால் அந்த குடும்பத்தினர் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
கடந்தவாரம் வவுனியா திருநாவற்குளத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து அந்தக் குடும்பத்துடன் தொடர்புகளைப் பேணிய பலர், திருநாவற்குளம் பகுதியில் தனிமைப்படுத்தலிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு 6 நாள்கள் கடக்கின்ற நிலையிலும் அவர்களுக்கு எந்த விதமான நிவாரண உதவிகளும் கிடைக்கப்பெறவில்லை.
இதேபோன்று கற்குழியில் கொரோனா தொற்றுக்குள்ளான மாணவியுடன் தொடர்புகளைப் பேணினர் என பூந்தோடம் ஸ்ரீநகர் கிராமத்திலும் சிலகுடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அவர்களுக்கான எந்தவித நிவாரணங்களும் இதுவரை வழங்கப்படவில்லை.
கூலித்தொழிலை நம்பி இருக்கும் இந்தக் குடும்பங்கள் தனிமைப்படுத்தல் காரணமாக வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான உதவிகளை அதிகாரிகள் வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

