வடபகுதி மக்களின் காணி உரிமையுயையும், அரசியல் பிரதிநிதித்துவத்தையும் பாதுகாக்க தமிழ் அரசியல் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வரவேண்டும் என்று வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பும், பிராஜா அபிலாஷ வலையமைப்பும் தெரிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக இந்த இரண்டு அமைப்புக்களும் இணைந்து வவுனியாவில் இன்று முன்னெடுத்த ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வடபகுதி மக்கள் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக யுத்தம் காரணமாக இடப்பெயர்வு, பாதுகாப்பு மற்றும் யுத்த சூழ்நிலையால் ஏற்பட்ட காரணங்களினால் தமது காணிகளை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.
ஆயுதப் போராட்டம் முடிவடைந்து 10 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இது வரைக்கும் யுத்த கால சூழலில் காணிகளை இழந்த மக்களின் காணிகளை அரசாங்கமோ, பாதுகாப்பு தரப்போ முழுமையாக விடுவிக்க எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
மக்கள் தமது நிலங்களை மீட்டு எடுப்பதற்காக பல்வேறுபட்ட கோரிக்கைளை முன்வைத்து கடந்த 10 வருடங்களாக போராடி வருகின்ற நிலையில் மக்களின் போராட்டத்தையோ ,கோரிக்கைகளையோ கண்டு கொள்ளாமலும் செவிமடுக்காமலும் உள்ள இச்சூழ்நிலையில் மக்கள் மனந்தளராமல் விடாமுயற்சியுடன் தமது காணி உரிமை போராட்டங்களை தொடர்ந்து கொண்டே இருக்கிறனர்.
இந்நிலையில் அரசாங்கம் வடபகுதியில் ஏற்கனவே ஆக்கிரமித்த காணிகளை விடுவிக்காமல் உள்ள நிலையில் மேலும் காணிகளை அபகரிக்கும் சூழ்ச்சியான திட்டங்களை முன்னெடுத்து செயற்படுத்தி வருகின்றது. அந்த வகையில் வனஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், கரையோர பாதுகாப்பு திணைக்களம், மாகாவலி அபிவிருத்தி திணைக்களம், வன இலாகா திணைக்களம்.போன்றவற்றின் ஊடாக வடபகுதி மக்களின் காணிகள் வாழ்விடங்கள் நன்கு திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்படுகின்றது. அந்த வகையில் கடந்த 1990 ஆண்டு யுத்தம் காரணமாக வலிவடக்கில் இடம்பெயர்ந்த மக்களின் சொந்த நிலங்கள் இன்னும் 3319 ஏக்கர் நிலம் விடுவிக்கப்படாமல் உள்ளது.
மேற்குறித்த திணைக்களங்களின் மூலம் வடபகுதி காணிகளை அரசாங்கமும், பாதுகாப்பு தரப்பும் சட்ட்டபூர்வமாக ஆக்கிரமித்து வருகின்றது. அந்த வகையில் முல்லைத்தீவில், முள்ளியவளையில், நித்தகை குளம் ஆகிய பகுதியில் 850 ஏக்கர் நிலமும், குறுந்தூர் குளம் 125 ஏக்கர் வயல் நிலமும், குமுளமுனை குளத்து வெளியில் 22 ஏக்கர் காணியும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது, அத்துடன் கொக்குத் தொடுவாயில் 100 ஏக்கர் வயல் காணி இதனால் 44 பேர் பாதிக்கப்படுகின்றனர்.
இது எமக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இத் திட்டத்தை பயன்படுத்தி சிங்கள மக்களை குடியேற்றுவதற்கான தோன்றுகின்றது. இதய பூமியான எமது வட பகுதி நிலங்களை இழப்பதுடன் அரசியல் பிரதிநிதித்துவத்தையும் இழக்க நேரிடும், எனவே. வடபகுதி மக்களின் நிலங்களை விடுவித்து அரசாங்கத்தின் எதிர்கால கபட நோக்கத்தை தோற்கடித்து வடபகுதி மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க தமிழ் அரசியல் தலைவர்கள், கட்சிகள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வரவேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
ஊடக சந்திப்பில் காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் இன்பம், மற்றும் அதன் வவுனியா முக்கியஸ்தர் தேவகிருஸ்ணன், முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி மாவட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

