வங்கியில் வாங்கிய கடன் பணத்தை தொழிலதிபர் விஜய் மல்லையா, மோட்டார் சைக்கிள் பந்தயத்திற்கு செலவு செய்ததாக இங்கிலாந்து கோர்ட்டில் இந்தியா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.
துவக்கம்
கர்நாடகாவை சேர்ந்த மதுபான தொழிலதிபர், விஜய் மல்லையா, விமான சேவை நிறுவனம் துவக்க, வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கினார். அந்த பணத்தை திருப்பிச் செலுத்தாமல், பிரிட்டனுக்கு மல்லையா தப்பியோடினார். அவரை நாடுகடத்தக்கோரி, பிரிட்டன் நீதிமன்றத்தில், மத்திய அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை, பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள நீதிமன்றத்தில் நேற்று துவங்கியது.
பொய்
அப்போது இந்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டதாவது: ஸ்டேட் பேங்க் மற்றும் ஐடிபிஐ வங்கியில், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் குறித்து பொய்யான தகவலை கூறி கடன் பெற்றார். வங்கிகளில் வாங்கிய ரூ.9 ஆயிரம் கடனை திருப்பி செலுத்தாமல், தவறாக பயன்படுத்தினார். கிங்பிஷர் ஏர்லைன்சை மறுசீரமைக்க போவதாக கூறி பணத்தை லண்டனில் உள்ள எச்எஸ்பிசி உள்ளிட்ட வங்கிகளில் பதுக்கினார். தொடர்ந்து, வங்கிக ணக்கிலிருந்து, கோவாவில் அதிகளவு பணத்த்தை எடுத்தார். அதில் நிறைய பணத்தை மோட்டார் சைக்கிள் பந்தயம் மற்றும் தனது சொந்த பயன்பாட்டுக்கு உள்ள விமானங்ளுக்காக செலவழித்தார். இவ்வாறு அவர் வாதிட்டார்.