பிரிட்டனில் இருந்து நாடு கடத்தக்கோரிய வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜராக சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவை பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து கொண்டு சரமாரியாக கேள்வி கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் முதலீடு செய்த பணத்திற்கு என்ன பதில் என அவர்கள் கேள்வி எழுப்பியதால் மல்லையா தர்ம சங்கடத்தில் திணறினார்.
முன்னதாக இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் இருந்து ரூ.9,000 கோடி அளவுக்கு கடன் வாங்கிய பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா வெளிநாடு தப்பிச்சென்றார். அவர் மீது இந்தியாவின் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அவர் தற்போது இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ளார். அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புமாறு இங்கிலாந்து அரசை மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அதன்படி அவரை ஸ்காட்லாந்து போலீசார் சில மாதங்களுக்கு முன் கைது செய்தனர்.
பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரை நாடு கடத்தக்கோரி லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று முதல் வருகிற 14-ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.
தலைமை மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் நடைபெறும் இந்த வழக்கு விசாரணைக்காக விஜய் மல்லையா இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினார். பின்பு விசாரணை முடிந்து வெளியே வந்த போது பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து கொண்டு சரமாரியாக கேள்வி கேட்டதால் அவர் திகைத்து போனார்.