மகாபாரதத்தை படமாக எடுக்க பலர் போட்டி போட்டு வருகின்றனர். அமீர் கான், ராஜமவுலி போன்றவர்களுக்கு இது கனவுப்படமாக இருந்து வருகிறது. இந்நிலையில் 2017ம் ஆண்டு, மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் ரூ. 1000 கோடி பட்ஜெட்டில் மகாபாரதம் படத்தை தயாரிக்க திட்டமிட்டு அறிவிப்பு வெளியானது.
பீமனின் பார்வையிலிருந்து மகாபாரதத்தை ரண்டமூழம் என்ற தலைப்பில் நாவலாக எழுதியவர் எம்.டி.வாசுதேவன் நாயர். இந்த நாவலை மையமாக வைத்து ஸ்ரீகுமார் மேனன் படமாக இயக்க முடிவு செய்தார். மோகன்லால் பீமனாக நடிக்க இருந்தார்.
ஆனால், ரண்டமூழம் நாவலை எழுதிய எம்.டி.வாசுதேவ நாயருக்கும், மகாபாரதம் படத்தை இயக்கயிருந்த ஸ்ரீகுமார் மேனனுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை கோர்ட் வரை சென்றது. இதன்காரணமாக இப்படம் கைவிடப்பட்டிருக்கிறது. இந்த தகவலை இப்படத்தை தயாரிக்கயிருந்த ரகுராம் ஷெட்டி உறுதிப்படுத்தியுள்ளார்.