தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் பெயரைச் சொன்னாலே அவரை வைத்து படம் தயாரித்த இயக்குனர்கள் அரசல் புரசலாக நெகட்டிவ்வாகத்தான் பேசுவார்கள். அந்தப் பிரச்சினைகளுக்காகவே கமல்ஹாசன் சொந்தப் படங்களைத் தயாரித்து நடித்துக் கொள்வார்.
ஒரு இடைவெளிக்குப் பிறகு அவர் வெளியில் நடிக்க ஆரம்பித்த படமான ‘சபாஷ் நாயுடு, இந்தியன் 2’ ஆகிய படங்கள் பிரச்சினைகளில் சிக்கியதும் சமீபத்திய வரலாறு. கமல்ஹாசன் நடித்து 2015ல் வெளிவந்த ‘உத்தம வில்லன்’ படம் நிதிப் பிரச்சினை காரணமாக வெளியீட்டுச் சிக்கலில் சிக்கியது.
அப்போது கமல்ஹாசனுக்கு 10 கோடி ரூபாய் கொடுத்து உதவியிருக்கிறார் பிரபல தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா. பின்னர் ஒரு படம் நடித்து கொடுப்பதாக அவர் தெரிவித்த காரணத்தால் அந்தப் பணத்தைக் கொடுத்திருக்கிறார் ஞானவேல். ஆனால், பின்னர் படமும் நடித்துக் கொடுக்கவில்லை, பணத்தையும் திரும்பத் தரவில்லை என தயாரிப்பாளர் சங்கத்தில் இப்போது புகார் கொடுத்துள்ளார்.. இது பற்றி விரைவில் விசாரிக்கப்படும் என தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் தெரிவித்துள்ளார்கள்.