லோக்சபா தேர்தலில் இரண்டாம் கட்டமான இன்று(ஏப்., 18) தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடக்கிறது. வேலூர் தேர்தல் நிறுத்தப்பட்டதால் அந்த தொகுதி தவிர மற்ற 38 தொகுதிகளிலும் காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் ஓட்டளித்து வருகின்றனர்.
திரைநட்சத்திரங்கள் பலரும் ஆர்வமுடன் ஓட்டளித்தனர். நடிகர் ரஜினிகாந்த், ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் தனது ஓட்டை பதிவு செய்தார். அனைவரும் தங்களது ஓட்டை தவறாமல் பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
நடிகர் அஜித் அதிகாலையிலேயே திருவான்மியூரில் உள்ள ஓட்டுச்சாவடியில் தனது மனைவி ஷாலினி உடன் வந்து ஓட்டளித்தார். அவரை காண ரசிகர்கள் சிலர் முண்டியடித்ததால் சற்று பரபரப்பானது.
நடிகரும், மக்கள் நீதி மைய தலைவருமான கமல்ஹாசன், தனது மகள் ஸ்ருதிஹாசன் உடன் சென்று மக்களோடு மக்களாய் வரிசையில் நின்று ஓட்டளித்தார்.
நடிகர் விஜய், மக்களோடு மக்களாக நின்று ஓட்டளித்தார். தி.நகரில் உள்ள ஓட்டுச்சாவடியில் சிவக்குமார், சூர்யா, கார்த்தி, ஜோதிகா உள்ளிட்ட குடும்பத்தினரும், பிரபு, விக்ரம்பிரபு உள்ளிட்டனரும் ஓட்டளித்தனர். பட்டினம்பாக்கத்தில் உள்ள ஓட்டுச்சாவடியில் நடிகை குஷ்பு ஓட்டளித்தார். கோடம்பாக்கத்தில் இசையமைப்பாளர் ரஹ்மான் ஓட்டளித்தார். சென்னை, கோடம்பாக்கம் கார்பரேஷன் காலினியில் நடிகர் விஜய் சேதுபதி ஓட்டளித்தார்.