தெலுங்கு படங்களில் நடித்து வந்த நடிகை ஈஷா ரெப்பா, 2016ம் ஆண்டு ஒய் என்ற தமிழ் படத்தில் அறிமுகமானார். புதுமுகங்கள் நடித்த இந்தப் படத்தை பிரான்சிஸ் மர்குஸ் இயக்கி இருந்தார், இளையராஜா இசை அமைத்திருந்தார். இந்தப் படம் தோல்வி அடையவே அதன் பிறகு ஈஷாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மீண்டும் தெலுங்கு படங்களுக்கு திரும்பினார். அங்கு 10 படங்கள் வரை நடித்தவர் இப்போது மீண்டும் தமிழுக்கு வருகிறார்.
ஒரு காலத்தில் காதல் செண்டிமென்ட் படங்களை இயக்கிய எழில், இப்போது காமெடி படங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார். தற்போது விஷ்னு விஷால் நடிப்பில் ஜெகஜாலகில்லாடி படத்தை இயக்கி உள்ளார். இதன் படப்பிடிப்புகள் முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகிறது.
இந்த படம் வெளிவருவதற்கு முன்பே ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் அடுத்து படத்தை துவங்கி விட்டார் எழில். இது காமெடி பேய் கதை. இதில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடிக்க ஈஷா ரெப்பா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தின் மூலம் தமிழில் விட்ட இடத்தை பிடிக்கும் கனவில் இருக்கிறார் ஈஷா.