மணிரத்னம் இயக்கத்தில் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை, இரண்டு பாகங்களாக 800 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாகப் படமாக்க உள்ளார்கள் என கடந்த சில வாரங்களாக மீடியாக்களில் மட்டுமே செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதுவரை அந்தத் தகவல்களை மணிரத்னம் தரப்பிலும் மறுக்காமல் இருப்பதால் அப்படி ஒரு விஷயம் நடந்து வருகிறது என்றும் நம்பும்படியாக உள்ளது.
ஆனால், மணிரத்னத்தைப் பொறுத்தவரையில் அவர் அறிவிப்பு வெளியிட்ட பின்னும் கூட எதையாவது மாற்றம் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஒரு பக்கம் பொன்னியின் செல்வன் நாவலை அவர் பிரம்மாண்டமாகப் படமாக்க உள்ளதாக செய்திகள் வந்தாலும், மறுபக்கம் சிலர் கர்ணன் கதையை தளபதி ஆக எடுத்தது போல ராமாயணம் கதையை அவர் ராவணன் ஆக இந்தக் காலக் கதையைப் போல மாற்றி எடுத்தது போல பொன்னியின் செல்வன் நாவலை எடுக்க மாட்டார் என்பது என்ன நிச்சயம் என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.
மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க உள்ளதாக இதுவரை வந்த செய்திகளின்படி, “வந்தியத்தேவனாக கார்த்தி, குந்தவையாக கீர்த்தி சுரேஷ், பூங்குழலியாக நயன்தாரா, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், பழுவேட்டரையர் ஆக சத்யராஜ், சின்ன பழுவேட்டரையர் ஆக மோகன்பாபு” ஆகியோர் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி உள்ளிட்ட பிரபலங்கள் சிலரும் நடிக்கப் போவதாகச் சொல்லி வருகிறார்கள்.
இந்த செய்தியெல்லாம் உண்மையா அல்லது வெறும் வதந்தியா என்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க மணிரத்னம் தரப்பில் சீக்கிரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டால் நல்லது என பொன்னியின் செல்வன் ரசிகர்கள் கருதுகிறார்கள்.