சகல இனங்களுக்கும் நீதியான முறையில் எல்லை நிர்ணயங்கள் மேற்கொள்ளப்படவில்லையெனவும் முஸ்லிம்களும், மலையக மக்களும் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் குற்றஞ்சாட்டினார்.
புள்ளிவிபரங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள எல்லை நிர்ணயத்தால் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் விசனம் தெரிவித்தார்.
மாகாண சபைகளின் தேர்தல் தொகுதி எல்லைகளை நிர்ணயிப்பதற்கான குழுவின் அறிக்கை மீதான விவாதத்தில் நேற்று(24) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார்.
மாகாண சபைகளுக்கான தேர்தலை மேலும் இழுத்தடிக்காது ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடத்துவதாயின் ஆகக் குறைந்தது பழையமுறைக்காவது செல்லவேண்டியிருப்பதாக அவர் வலியுறுத்தினார்.
எல்லை நிர்ணய அறிக்கையால் சிறுபான்மையினருக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. எல்லை நிர்ணயத்தை மேற்கொண்ட குழுவின் உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பில் குறைபாடுகள் உள்ளன.
எல்லை நிர்ணய குழுவினர் பல் உறுப்பினர் தொகுதிகளை அமைப்பதற்கு விரும்பவில்லை. அவர்கள் புள்ளிவிபரங்கள் என்ற ஆடையை அணிந்துகொண்டு எல்லைகளை நிர்ணயம் செய்துள்ளனர். ஒரு இலட்சம் வாக்காளர்கள் இருந்தால் அங்கு ஒரு தொகுதியை ஏற்படுத்த முடியும் என்பதே அவர்களின் எடுகோள். பல் உறுப்பினர் தொகுதியை ஏற்படுத்துவதாயின் 2 இலட்சம் பேர் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் நிலைப்பாடாக இருந்தது. சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகளை கவனத்தில் கொண்டு பல் உறுப்பினர் தொகுதிகளை உருவாக்க அவர்கள் விரும்பவில்லை.
உதாரணமாக கண்டி, அநுராதபுரம், குருநாகல், கேகாலை ஆகிய மாவட்டங்களில் முஸ்லிம்கள் கணிசமாக வாழ்கின்றனர். அந்தப் பகுதிகளில் பல் உறுப்பினர் தொகுதிகளையோ அல்லது அவர்களுக்கான தனியான தொகுதிகளையோ அவர்கள் உருவாக்க விரும்பவில்லையெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

