நிறைவடைந்த பொதுத்தேர்தலில் மக்கள் வழங்கியுள்ள மகத்தான ஆணையை சரியாக பயன்படுத்த வேண்டுமென பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி பணிக்குழுவின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று அலரி மாளிகையில் இலங்கையின் திட்டமிடல் சேவை சங்கத்தின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கலந்துரையாடலின்போது பசில் ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “மக்களால் வழங்கப்பட்டுள்ள மகத்தான ஆணையை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட வேண்டும்.
மேலும் ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தை செயற்படுத்துவதற்கே மக்கள் பெரும்பான்மை ஆதரவினை வழங்கியுள்ளனர்.
எனவே அதற்கமைய, நாட்டின் அபிவிருத்தியில் தெளிவான மாற்றத்தை கொண்டுவர வேண்டும். விசேடமாக தொழிலாளர்களை மையப்படுத்தி கல்வி மற்றும் தொழில் பயிற்சிக்கான திட்டங்களை வகுக்க வேண்டும்.
மேலும், அபிவிருத்தி உள்கட்டமைப்பு மேம்பாட்டுடன் மட்டுப்படுத்தப்படக்கூடாது. எனினும் மக்களின் பங்களிப்புடன் விரிவான அபிவிருத்தி செயற்பாட்டை நோக்கி நகர வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

