கருப்பு வெள்ளை சினிமா, ஈஸ்ட்மென் கலர் காலத்து நாயகிகளில் முக்கியமானவர் வாணிஸ்ரீ. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். அவரது காலத்து முக்கியமான கதாநாயகியாக நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘மகாநடி’ படம் பற்றி தற்போதுதான் கருத்து தெரிவித்துள்ளார் வாணிஸ்ரீ.
சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்த ‘மகாநடி’ படம் கடந்த வருடம் வெளிவந்து, பல சீனியர் நடிகைகள், நடிகர்களால் பாராட்டப்பட்டது. ஆனால், வாணிஸ்ரீ தெரிவித்திருக்கும் கருத்து படக்குழுவினரை நிச்சயம் அதிர்ச்சியடைய வைத்திருக்கும்.
“மகாநடி’ படத்தின் இடைவேளைக்குப் பிறகு நான் தூங்கிவிட்டேன். சாவித்ரியின் நிஜ வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள் எதுவுமே இடைவேளைக்குப் பின் இடம் பெறவில்லை,” என அவர் தெரிவித்திருக்கிறார்.
வாணிஸ்ரீயின் வாழ்க்கை வரலாறு படமாகுமா என்று அவரிடம் கேட்டதற்கு, ‛‛பல திருப்பங்களும் சுவாரசியங்களும் உள்ள பயோபிக் படங்களைத்தான் ரசிகர்கள் ரசிப்பார்கள். என் வாழ்க்கையில் அப்படிப்பட்ட திருப்பங்கள் எதுவும் இல்லை” என தெரிவித்துள்ளார்.