தமிழ்த் திரையுலகத்தில் முன்னணி நடிகர்களின் புதிய படங்கள் வெளியாகிறது என்றாலே அந்த தியேட்டர்கள் விழாக் கோலம் பூண்டுவிடும். தற்போதைய டிஜிட்டல் பேனர் யுகத்தில் தியேட்டர்களில் மட்டும் பேனர்களை வைக்காமல், தியேட்டர் உள்ள தெரு முழுவதும் பேனர்கள் வைத்த காட்சியை ‘சர்கார்’ படத்தில் பார்க்க முடிந்தது. தமிழ்நாடு முழுவதும் உள்ள பல ஊர்களில் விஜய் ரசிகர்கள் விதவிதமான பேனர்களை வைத்திருந்தார்கள்.
கேரளா ரசிகர்கள் ஒரு படி மேலே போய் கொல்லத்தில் 175 அடி உயர கட்-அவுட் வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள். ஆனால், அடுத்த நாளிலேயே தமிழ்நாட்டில் ‘சர்கார்’ வெளியான பல தியேட்டர்களில் அந்த பேனர்கள் அதிமுகவினரால் கிழிக்கப்பட்டது. தெருவெங்கும் வைக்கப்பட்ட மற்ற பேனர்களை காவல் துறை உதவியுடன் ரசிகர்களே நீக்கினார்கள். அனுமதியின்றி பேனர்களை வைத்த குற்றத்திற்காக சில விஜய் ரசிகர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுகவினரால் கிழிக்கப்பட்ட ‘சர்கார்’ பேனர்களுக்குப் பதிலாக தயாரிப்பு நிறுவனமும், விஜய் ரசிகர்களும் வேறு எந்த பேனரையும் இதுவரை வைக்கவில்லை. ‘சர்கார்’ வெளியாகியுள்ள பல தியேட்டர்களில் பேனர்கள் இல்லாமல், என்ன படம் ஓடுகிறது என்று கூட தெரியாமல் தான் படம் ஓடிக் கொண்டிருக்கிறது.