உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தூய்மை அருணை இயக்கம் சார்பில் 10 ஆயிரம் மரக்கன்று நடும் விழா திருவண்ணாமலை வ.உ.சி. நகரில் நடந்தது. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார்.நடிகர் விவேக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அவர் பேசியதாவது:-கன்னியாகுமரி முதல் குஜராத் வரை உள்ள மேற்கு தொடர்ச்சிமலை இந்தியாவின் கொடையாகும்.மேற்கு தொடர்ச்சி மலையை இனஸ்கோ பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது. அதனை முழுமையாக பராமரிக்கவில்லை.
தீ விபத்து, மரங்களை வெட்டுவதன் மூலம் வன விலங்குகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை மாற்ற வேண்டும்.
தமிழகத்தில் அதிகளவில் மரங்களை நட்டு நீர்வளத்தையும், பசுமையையும் பாதுகாக்க வேண்டும்.நாம் நடும் ஒவ்வொரு மரமும், ஒவ்வொரு ஆக்சிஜன் சிலிண்டரை போல இருக்கும். நாம் உயிர் வாழ வேண்டும் என்றால் நமக்கு ஆக்சிஜன் தேவை.
எனவே தான் ஒவ்வொரு மரத்தையும் தாய்க்கு நிகராக நினைக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.மு.பெ.கிரி எம்.எல்.ஏ., அருணை தூய்மை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.













