நடிகர் சிவகார்த்திகேயனின் சொந்தப் படம் கனா. கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி, பலரது பாராட்டையும் பெற்றது. கதிர் நடித்திருக்கும் அந்தப் படத்தில் கிரிக்கெட் பெண் வீராங்கணையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்ட நிலையில், அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், தன்னுடைய தோல்வியடைந்த காதல்கள் குறித்து மனம் திறந்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
அவர் கூறியிருப்பதாவது: நான் இப்போது சிங் கிளாகத்தான் இருக்கிறேன். என்னைப் பொறுத்த வரை, காதல் என்பது, ஒரு அதிர்ஷ்டமில்லாத விஷயமாக இருந்து வருகிறது. என்னுடைய முதல் காதல் தோல்வியில் முடிவடைந்தது. அந்த காதல் வந்த காலத்தில் நான் ப்ளஸ் டூ படித்துக் கொண்டு இருந்தேன். என் தோழியே, என் காதலனுடன் சேர்ந்து கொண்டு என்னை ஏமாற்றினார்.
சில ஆண்டுகள் கழித்து, இன்னொருவருடன் எனக்கு காதல் வந்தது. ஆனால், அந்த உறவும் நீடிக்கவில்லை. பிரிய வேண்டியதாகி விட்டது. என்னைப் பொறுத்த வரையில் நான் ரொம்பவும் சென்சிட்டிவ்வான டைப். ஒருவருடன் காதலில் இருக்கும்போது, அந்த காதல் எக்காரணம் கொண்டும் முடிந்து விடக் கூடாது என நினைப்பேன்; அதை பாதுகாப்பாக வைத்திருக்க முயல்வேன். ஆனால், என்னுடைய துரதிருஷ்டம், காதல் எல்லாமே தோல்வியிலேயே முடிந்து வருகிறது.
அதனால், இப்போது காதல், கத்தரிக்காய் என நேரத்தைச் செலுத்தாமல், முழு நேரமும் நடிப்புத் தொழிலில் மட்டும் கவனம் செலுத்துகிறேன். ஒரு நடிகையாக இருந்து கொண்டு காதலிப்பது என்பது, மிக மிக சிரமம். ஆனாலும், காதல் என்பது மிக மிக அவசியமானது; ரசிப்புக்குரியது; அலாதியானது. அதனால், எல்லோருக்கும் காதல் என்பது வேண்டும்.
சில காதல் ஜோடிகளைப் பார்க்கும்போது, பொறாமை வராது. மகிழ்ச்சியே வரும். நான், இப்போதும், எனக்கான காதலருக்காக காத்திருக்கிறேன். நான் கொண்டாடும் காதலர் கிடைத்து விட்டால், அவரது அருகிலேயே எந்நேரமும் இருந்து அவரை பார்த்துக் கொள்வேன். வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாகக் கழிப்பேன்.
இவ்வாறு ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியிருக்கிறார்.