பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆரவ்வும், நடிகை ஓவியாவும் ஒருவரை ஒருவர் காதலிப்பதாக தகவல்கள் கசிந்தன. ஆனால், ‘இருவருக்கும் இடையில் காதலும் இல்லை; கத்திரிக்காயும் இல்லை. இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்ட இளம் நண்பர்கள். அவ்வளவுதான்’ என கருத்துக் கூறி, காதலுக்கு மறுப்புத் தெரிவித்தனர். ஆனாலும், இருவரும், அவ்வப்போது வெளியிடங்களிலும் சந்தித்துக் கொள்கின்றனர்.
இந்நிலையில், இயக்குநர் நரேஷ் சம்பத் இயக்கும் புதிய படமான ராஜபீமாவில், ஆரவ், நாயகனாக நடிக்க, ஆஷிமா நாயகியாக நடிக்கிறார். அதேநேரம், இப்படத்தில், நடிகை ஓவியாவும் நடிக்கிறார். முதலில், படத்தில் கவுரவத் தோற்றமாகத்தான் ஓவியா வருகிறார். ஆரவ்வுடன் சேர்ந்து, ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார் அவ்வளவுதான் என கூறிவந்தனர்.
இப்போது, அந்தப் படத்தில், நடிகை ஓவியாவுக்கென்று சில பிரத்யேக காட்சிகள் அமைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. ‘ராஜபீமா’ படத்தில் நடிகை ஓவியா, ஒரு நடிகையாகவே நடித்திருக்கிறார். அவரது தீவிர ரசிகராக இருக்கும் ஆரவ், ஓவியா நடித்து வெளியாகும் புதிய படத்தின் முதல் காட்சியை பார்க்க வருகிறார். அப்போது, படத்தில் நடித்திருக்கும் ஓவியாவே, படம் பார்க்க வருகிறார்.
அப்போது, ஓவியாவின் ரசிகராக இருக்கும் ஆரவ், தன்னை ஓவியாவின் காதலியாக நினைத்துக் கொள்கிறார். தியேட்டர் பக்கத்திலேயே இருந்தபடியே, ஓவியாவை பார்த்துவிடும் ஆரவ், அங்கிருந்தபடியே, ஓவியாவுடன் இணைந்து ஒரு பாடலுக்கு கனவு காண்கிறார். அப்போது, ஆரவ்வும், ஓவியாவும் நடனமாடி எதிரில் இருப்பவர்களை ரசிக்க வைக்கிறார்களாம்.