நடிகரும், முன்னாள் எம்.பி., ஆன ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 46. ஏற்கனவே இவருக்கு இதய பிரச்னை இருந்து, ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதன்பின்னர் உடல்நிலை தேறிய நிலையில் அதிமுக.,விற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வந்தார். இன்றும் (ஏப்.13) அவர் ராமநாதபுரத்தில் பல பகுதிகளில் பிரசாரம் செய்தார். பிரசாரத்திற்கு பின்னர், ராமநாதபுரத்தில் உள்ள வீட்டில் உணவருந்தி ஓய்வெடுத்த போது, மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு, ரித்திஷை, உறவினர்கள் அழைத்து சென்றனர். ஆனால் அவரது உயிர் பிரிந்துவிட்டது.
ரித்திஷிற்கு ஜோதிஸ்வரி என்ற மனைவியும், ஆரிக் ரோஷன் என்ற 11 வயது மகனும் உள்ளனர். ரித்திஷின் உடல் ராமநாதபுரத்தில் உள்ள அவரது இல்லத்திலேயே அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்குகள் நாளை(ஏப்.,14) நடைபெறுகின்றன. ஜே.கே.ரித்திஷின் திடீர் மரணம், திரையுலகினர் மற்றும் அரசியல் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மரணத்தில் திடீர் குழப்பம்
ரித்திஷ் மரணம் அடைந்த செய்தி வெளியான சற்றுநேரத்திலேயே அவரது உடல் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர், திடீரென இதயதுடிப்பு ஏற்பட்டதாகவும், மீண்டும் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் ரித்திஷ் உயிர் பிரந்ததை உறுதிப்படுத்தினர். இதனால் அவரது மரணத்தில் குழப்பமான சூழல் ஏற்பட்டது.
இரங்கல்
ரித்திஷின் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், நடிகர் சங்க தலைவர் நாசர் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.