தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய் சேதுபதி, தெலுங்கில் ‘சைரா’ படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார். அந்தப் படத்தில் ‘சைரா’ சிரஞ்சீவிக்கு உதவி செய்யும் தமிழர் ராஜபாண்டி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் அந்தப் படத்திற்காக அவருக்கு ஒரு பெரும் தொகை சம்பளமாகக் கொடுக்கப்பட்டதாம். சிரஞ்சீவியே அக்கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி தான் நடிக்க வேண்டும் என்று அழைத்ததால் அந்த சம்பளம் என்கிறார்கள்.
அடுத்து விஜய் சேதுபதி, ‘உப்பெனா’ என்ற தெலுங்குப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அந்தப் படத்தில் சிரஞ்சீவி சகோதரியின் இரண்டாவது மகன் வைஷ்ணவ் தேஜ் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். இந்தப் படத்திற்காக விஜய் சேதுபதிக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்துள்ளதாக டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகருக்கு அவ்வளவு சம்பளமாக என ஆச்சரியப்படுகிறார்களாம். தமிழில் முன்னணியில் இருப்பவர் வேறு மொழியில் வில்லனாக நடிப்பதே பெரிய விஷயம். அப்படியென்றால் அதற்கேற்ற சம்பளம் கொடுத்துதானே ஆக வேண்டும் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.