நடிகையான அமலாபால் தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார். கடவர் என்ற படத்தை தனது மானேஜருடன் இணைந்து தயாரித்து நடிக்கிறார். இது ஒரு துப்பறியும் கதை. அமலாபால் தடயவியல் டாக்டராக நடிக்கிறார். கடவர் என்ற லத்தீன் மொழி சொல்லுக்கு பிணம் என்று பொருள். தயாரிப்பாளர் ஆனது ஏன் என்பது குறித்து அமலாபால் கூறியதாவது:
இந்த படத்தின் கதையை 3 ஆண்டுகளுக்கு முன்பே கேட்டேன். இந்த படத்தை ஒரு குறைந்த பட்ஜெட்டில் எடுக்க முடியாது, புதிய இயக்குனரை நம்பி யாரும் பெரிய பட்ஜெட் ஒதுக்க மாட்டார்கள். ஆனாலும் கதையை என்னால் விட முடியவில்லை. ஒரு நடிகையாக இந்த படத்தை ஆதரிக்க வேண்டும் என்று உணர்ந்தேன். என்னை போலவே இந்த படத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த என் சக தயாரிப்பாளர்களான அஜய் பணிக்கர் மற்றும் பிரதீப் ஆகியோருக்கு ஆதரவாக இருக்க விரும்பினேன். அதனால் நானும் தயாரிப்பாளர் ஆனேன். இன்னும் பல படங்களை இணைந்து செய்ய நாங்கள் உறுதியாக உள்ளோம்.
இயக்குனர் அனூப் பணிக்கர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் அபிலாஷ் பிள்ளை ஆகியோர் திரைக்கதையில் குறிப்பிடத்தக்க வேலைகளை செய்துள்ளனர். அவர்களின் முன் தயாரிப்பு முயற்சிகளால் குறித்த நேரத்தில் படப்பிடிப்பை முடித்து விடுவோம் என நம்புகிறேன். எங்களது முதல் தயாரிப்பு பாக்ஸ் ஆபிஸிலும் சாதனைகளை செய்யும் என நிச்சயமாக சொல்ல முடியும்.
ஒரு கலைஞராக, கடந்த காலத்தில் ஸ்டைலான மற்றும் வணிகரீதியான கதாபாத்திரங்களில் நடித்தேன். இப்போது என்னை நடிகையாக அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்கும் தெளிவு கிடைத்திருப்பதாக நம்புகிறேன். ஒரு நடிகையாக என்னை திருப்திப்படுத்தும் பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் நடிப்பதை விரும்புகிறேன்.
இதுவரை பார்த்திராத மற்றும் கேட்டிராத பல புதிய விஷயங்களை கொண்ட ஒரு கதையாக கடவர் இருக்கும். நான், இந்தப்படத்தில் ஒரு தடயவியல் டாக்டராக நடிக்கிறேன். இதில் நடிக்க நான் நிறைய தயாராக வேண்டி இருந்தது. கேரளாவின் மிகவும் பிரபலமான தடய அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் உமா டத்தனால் எழுதப்பட்ட ஒரு போலீஸ் சர்ஜூனோடே ஓர்மகுறிப்புகள் என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது.
கதாபாத்திரத்துக்கு தயாராவதற்கு அந்த புத்தகத்தை வாசித்ததோடு மட்டுமல்லாமல், அந்த தொழிலை பற்றிய மேலும் நுணுக்கமான அறிவைப் பெற ஒரு தடய அறுவை சிகிச்சை நிபுணருடன் இரண்டு நாட்கள் செலவிட்டேன். இந்த படத்தில் நான் ஒரு புதிய தோற்றத்தில் தோன்றுவேன், ரசிகர்களுக்கு அது ஒரு சர்ப்ரைஸாக இருக்கும் என்கிறார் அமலாபால்.