மலையாளத்தில் சீனியர் நடிகரான சுரேஷ் கோபி, தமிழில் தீனா, ஐ போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் ஆண்டனி நடித்து வரும் தமிழரசன் படத்தில் நடித்து வருகிறார். இவர் லோக்சபா தேர்தலில் கேரள மாநிலம் திருச்சூரில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இந்நிலையில, நேற்று முன்தினம் திருச்சூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த சுரேஷ்கோபி, சபரிமலை ஐயப்பன் கோயில் சம்பந்தப்பட்ட சர்ச்சைகளை பேசி ஓட்டு சேகரித்துள்ளார். இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி சபரிமலை சர்ச்சை குறித்து சுரேஷ்கோபி பிரச்சாரத்தில் பேசியதாக அவருக்கு திருச்சூர் மாவட்ட கலெக்டர் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். அதோடு, 48 மணி நேரத்திற்குள் இதற்கு அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.