ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த ‘சர்கார்’ படம் முதல் இரண்டு நாட்களில் 100 கோடி வசூலித்ததாகத் தகவல் வெளியானது. ஆனால், நேற்று படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் நடத்தியதால் பல தியேட்டர்களில் காட்சிகள் பாதிக்கப்பட்டன. இன்று காலையும் பல ஊர்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. மறு தணிக்கை முடிவடைந்து இன்று மதியக் காட்சி முதல் சர்ச்சைக்குரிய காட்சிகள் இல்லாமல் படம் திரையிடப்படுகிறது.
இதனிடையே, ‘சர்கார்’ படத்தின் வசூல் நாளையும், நாளை மறுநாளும் விடுமுறை நாட்கள் என்பதால் பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முன்பதிவு இணையதளங்களில் சென்று பார்த்தால் ஒரு சில மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் தவிர மற்ற தியேட்டர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான சீட்டுகள் இன்னும் முன்பதிவு செய்யப்படாமல் காலியாக உள்ளன. மாலை மற்றும் இரவுக் காட்சிகள் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
வெளியான முதல் வார இறுதி நாட்களிலேயே ‘சர்கார்’ படத்தின் முன்பதிவு எதிர்பார்த்தபடி ஹவுஸ்புல் ஆகாதது ஆச்சரியமளிப்பதாக உள்ளது. படத்திற்கான சர்ச்சை எழுந்ததும் அதனாலேயே ‘மெர்சல்’ படம் போல இந்தப் படம் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், அதற்கு மாறாக ‘சர்கார்’ படத்திற்கு நடந்து வருகிறது.