சுதந்திர கட்சி இன்று சகல சவால்களை தாண்டி வந்துள்ளது. எனவே இன்றிலிருந்து சுதந்திர கட்சி வெற்றி பாதையிலேயே செல்லும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 68 ஆவது ஆண்டு நிறைவு மாநாடு நேற்று கொழும்பு – சுககதாச உள்ளக அரங்கில் இடம்பெற்றது.
இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இலங்கையை இரு தாசாப்தங்களுக்கும் அதிகமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் ஆட்சி செய்ததைப் போன்றும், எதிர்வரும் காலங்களிலும் சுதந்திர கட்சியின் ஆதரவுடனேயே ஆட்சி அமைக்கப்படும்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அண்மையில் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்தது. கட்சியை ஸ்தாபித்த பண்டாரநாயக்க இது போன்ற சவால்களுக்கு முகங்கொடுத்து இறுதியில் உயிரிழந்தார்.
அதே போன்று அதன் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இரண்டாகப் பிளவடைந்து கட்சி தலைமையகம் கூட எம் கைவசம் இருக்கவில்லை.
ஆனால் இன்று அவை அனைத்திற்கும் வெற்றிகரமாக முகங்கொடுத்து பலமான ஒரு கட்சியாக உருவாகியுள்ளது என்பதைக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.