கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை ரஸ்யாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவருவது தொடர்பாக எதிர்வரும் வாரம் தீர்மானிக்கப்படவுள்ளது.
அதன்படி எதிர்வரும் வாரம் ரஷ்ய தூதுவருடன் முக்கிய பேச்சுகளை மேற்கொள்ளவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகமொன்றுக்குக் கருத்து வெளியிட்டுள்ள அவர், பேச்சுகள் வெற்றியடைந்தால் உலக சுகாதார ஸ்தாபனத்தால் அங்கீகாரம் வழங்கப்பட்ட மருந்துகள் கிடைப்பதற்கு முன்னரே ரஷ்ய மருந்தான ஸ்புட்னிக் வி தடுப்பூசி அரசதுறையினருக்கு கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய மருந்தை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான பேச்சுகள் இடம்பெறுகின்றன எனக் குறிப்பிட்டுள்ள இராஜாங்க அமைச்சர், ரஷ்ய அரசாங்கம் தனது மருந்தை இலங்கைக்கு வழங்குவதற்குத் தயாராகவுள்ளதால் அரசமருந்தாக்கல் கூட்டுத்தாபனம் மூலம் அந்த மருந்தைக் கொண்டுவரமுடியும் எனத் தெரிவித்துள்ளார்.
இதனைத்தவிர தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் பல பேச்சுகள் இடம்பெறுகின்றன எனவும் அதனடிப்படையில் தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எந்த மருந்தை இலங்கைக்கு கொண்டுவரவேண்டும், என்னவிலை என்பது போன்ற விவரங்களை இதுவரை தீர்மானிக்கவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தனியார் துறையினர் ஊடாக மருந்துகளைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தற்போது மொடேர்னா மற்றும் பைசர் நிறுவனத்தின் மருந்துகள் மற்றும் சீன மருந்துகள் தொடர்பாகக் கவனம் செலுத்துவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விலை, சேமிப்பதற்கான காலநிலை போன்றவற்றின் அடிப்படையில் எந்த மருந்தை விரைவில் இலங்கைக்கு கொண்டுவரமுடியும் எனத் தீர்மானிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

