மலையாள சினிமாவில் கதாநாயகனாக வளர்ந்துகொண்டே, தமிழில் வில்லன் மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் தயங்காமல் நடித்து வருபவர் நடிகர் டொவினோ தாமஸ்.. நடிப்பு மட்டுமின்றி சமூக செய்திகளிலும் அக்கறையுடன் தனது செயல்பாட்டை மேற்கொண்டு வருபவர். கடந்த வருடம் கேரள வெள்ளத்தின்போது இவரது அர்ப்பணிப்பு உணர்வை பலரும் கண்கூடாக கண்டனர்.
இந்தநிலையில் கேரள போலீசார் குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதன் ஆபத்தை விளக்கும் விதமாக மூன்று நிமிட குறும்படம் ஒன்றை தயாரித்துள்ளனர் அதில் தயாரிப்பாளரும் நடிகருமான விஜய்பாபு குடித்துவிட்டு வண்டி ஓட்டுகிறார்.. நகரில் ஆங்காங்கே நடக்கும் போலீசாரின் சுவாச சோதனை நடைமுறைக்கு பயந்துகொண்டு தனது காரை சாலையில் ஒரு ஓரத்தில் நிறுத்திவிட்டு ஓய்வெடுக்க நினைக்கிறார்.
அப்போது அங்கே வழிப்போக்கனாக வரும் டொவினோ தாமஸ் விஜய்பாபுவிடம் குடிப்பதும், குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதும் எவ்வளவு ஆபத்தான செயல் என்பதை எடுத்துரைக்கிறார் என்கிற விதமாக இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.