2008ல் வெளிவந்த ‘குருவி’ படம் 150 நாள் ஓடியதா இல்லையா என்பது பற்றி இப்போது ஒரு நடிகருக்கு சந்தேகம் வந்துள்ளது. அந்தப் படத்தில் நடித்த பவன், ‘அசுரன்’ படத்திலும் வில்லன்களில் ஒருவராக நடித்துள்ளார். அவருக்குத்தான் ‘குருவி’ படம் ஓடியது பற்றிய சந்தேகம் வந்துள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ், மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்த ‘அசுரன்’ படம் 100 நாட்கள் ஓடியதை அடுத்து இன்று அப்படத்தின் 100 வது நாள் விழா நடைபெற்றது.
அப்போது பேசிய நடிகர் பவன், “நான் கடைசியாக ‘குருவி’ படத்தின் 150வது நாள் விழாவில் கலந்து கொண்டேன். எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியலை. ஆனால், இந்தப் படத்துல கண்டிப்பா நடந்திருக்கு,” என்றார். உடனே மேடையில் இருந்த தனுஷ், வெற்றிமாறன் உட்பட பலரும் அதிர்ச்சியடைந்தனர். ஒரு படத்தின் விழா மேடையில் விஜய் படம் பற்றி இப்படிப் பேசிவிட்டாரே என பலரும் சிரித்துவிட்டனர்.
கடைசியாகப் பேசிய தனுஷ், அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு விளக்கம் கொடுத்தார். “இந்த மாதிரி விழா நடக்கும் போது நாம பேசறது மட்டும் தான் நம்ம கன்ட்ரோல்ல இருக்கும். அதனால, எது சரியோ அதை எடுத்துக்குங்க, எது சரியில்லையோ அதை விட்டுருங்க,” என்றார்.