இந்தியாவிற்காக விளையாடுவது தனக்கு என்றுமே உற்சாகம் அளிப்பதாகக் கூறுகிறார் யுவராஜ் சிங். “நான் மேலும் இரண்டு அல்லது மூன்று ஐபிஎல் தொடர்கள் விளையாடுவேன்” என்று கூறும் 36 வயதான யுவி, தனக்குப் புற்றுநோய் ஏற்படாமல் இருந்திருந்தால், ஒரு வெற்றிகரமான டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையும், 80 போட்டிகளில் விளையாடிய அனுபவமும் கிடைத்திருக்கும் என்றும் கூறுகிறார். ஆனால், அதனை அவர் ஒரு குறையாக எடுத்துக்கொள்ளவில்லை. மேலும், கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெறும்போது, எவ்வித மனக்கசப்பும் இல்லாமல் வெளியேற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2017ம் ஆண்டு ஜனவரியில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு கம்பேக் கொடுத்த யுவராஜ், இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டி உள்பட 11 போட்டிகளில் விளையாடினார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு விளையாடிய அவர், அதன்பின் நடந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இடம்பெறாமல் போனார். செப்டம்பர் மாதம் நடந்த தொடரிலும் அவர் இடம்பெறாத காரணத்தினால், அவர் வெகு சீக்கிரம் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஒய்வெடுத்துக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும், இந்தியாவிற்காக மீண்டும் ஒருமுறை விளையாடுவது குறித்து நம்பிக்கையோடு இருக்கிறார் யுவி. 2 கோடி ரூபாய்க்கு மீண்டும் அவரை கிங்க்ஸ் XI பஞ்சாப் உரிமையாளர்கள் தங்கள் அணியில் இணைத்துள்ளார்கள்.
ஒரு நாளிதழுக்கு அவர் அளித்திருந்த பேட்டியில், “என்னால் முடிந்ததை நான் செய்திருக்கிறேன். எந்த நேரத்தில் நான் வெளியேற வேண்டுமோ, அப்போது நான் வெளியேறுவேன். இதற்குமேல் என்னால் செய்திருக்க முடியாது. நான் இப்போதும் கிரிக்கெட் விளையாடுவதற்குக் காரணம், இந்தியாவிற்கு விளையாட வேண்டும் என்பதோ ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்பதோ மட்டுமல்ல. நான் கிரிக்கெட்டை நேசிக்கின்றேன் என்பதுதான்.
“வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகளில் நான் போராளியாக இருந்திருக்கிறேன். பல்வேறு சூழ்நிலைகளை எதிர்கொள்பவர்களுக்கும், புற்றுநோய் போன்ற நோய்களினால் அவதிப்படுபவர்களுக்கும் நான் உதவிகரமாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்காத ஒருவனாகவே நான் அறியப்பட விரும்புகின்றேன். நான் இந்தியாவிற்காக விளையாடினாலும், இல்லையென்றாலும், என்னுடைய நூறு சதவிகித உழைப்பைக் களத்தில் அளிப்பேன். என்னுடைய YouWeCan அறக்கட்டளை மூலமாக புற்றுநோய் தொடர்பான பிரச்னைகளில் கவனம் செலுத்துவேன். குறிப்பாக, குழந்தைகளுக்கு ஆதரவாக இருப்பேன். எனக்கு இளைய தலைமுறையினரிடம் உரையாட பிடித்திருக்கிறது. வாய்ப்புகள் குறைந்த குழந்தைகளின் கல்விக்காகவும், விளையாட்டுக்காகவும் உழைப்பேன்” என்கிறார் யுவராஜ்.