மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாகனேரியிப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெறுவதாகக் கிடைத்த தகவலையடுத்து அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டு கொலை அச்சுறுத்தலுக்காளானது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனேரிப் பகுதியில் சட்ட விரோதமான முறையில் அகழப்படும் மணல் மூடப்பட்ட கொள்கலன் லொறிகளில் வெளிமாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்யப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் உண்மைத் தன்மையை அறிந்து கொள்வதற்காக தொலைக்காட்சி நிறுவனமொன்றின் பிரதேச ஊடகவியலாளர் ஒருவர் அங்கு சென்றுள்ளார்.
அவ்வேளையில் காடுகளுக்குள் மறைந்திருந்த நிலையில் ட்ரக்டர், டிப்பர் மற்றும் லொறிகள் மூலம் மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த கும்பலொன்று ஊடகவியலாளரை சுற்றி வளைத்து வீடியோ கமெரா, தொலைபேசி என்பனவற்றைப் பலவந்தமாகக் கைப்பற்றிக் கொண்டதுடன் ஊடகவியலாளரைத் தாக்கவும் முயற்சித்துள்ளனர்.
சுமார் 45 நிமிட நேரம் அவரைத் தடுத்து வைத்திருந்த கும்பல் தகாத வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தி உயிரச்சுறுத்தலை விடுத்துள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக மணல் அகழும் விடயம் வெளியில் வரக்கூடாது என்ற நிபந்தனையுடன் ஊடகவியலாளரை விடுவித்த கும்பல், கைப்பற்றிய வீடியோ கமெரா, மற்றும் கைப்பேசியையும் ஒப்படைத்துள்ளது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளரான செங்கலடியைச் சேர்ந்த குகராசு சுபஜனிடம் சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலதிகமாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் வாழைச்சேனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

