தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 205 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.
இந்தியக் கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்க அணி கைப்பற்றியது. அடுத்து 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 4 ஆட்டங்களிலும் தென்னாப்பிரிக்க அணி ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்றன. இந்திய அணி தொடரை வென்றுவிட்ட நிலையில் சம்பிரதாயமான கடைசி போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்குர் இடம்பிடித்தார்.
டாஸ் வென்ற இந்தியக் கேப்டன் கோலி தென்னாப்பிரிக்காவை முதலில் பேட்டிங் செய்யப்பணித்தார். அதன்படி களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு தொடக்கத்தில் இருந்தே விக்கெட்டுகள் சரிந்தன. 46.5 ஓவர்களில் அந்த அணி 204 ரன்களுக்கு ஆல் ஆவுட்டானது. அதிகபட்சமாக காய ஸோன்டோ 54 ரன்கள் எடுத்தார். பெலுக்வாயோ 34 ரன்களும், டிவில்லியர்ஸ் 30 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாக்குர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பும்ரா, சாஹல் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 205 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.