உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து இன்று யாழ்ப்பாணத்தில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் இணைந்து இந்த போராட்டத்துக்கான அழைப்பை விடுத்துள்ளன.
இதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள ஏற்பாட்டாளர்கள்,
‘அநுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 10 நாட்களாகத் தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவர்களில் இருவரது நிலைமை மோசமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இவர்களது உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவாக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்றை நடத்தத் தீர்மானித்துள்ளோம்.
யாழ்ப்பாணத்தில் நாளை திங்கட்கிழமை காலை 7 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெறும்.
இந்தப் போராட்டத்தில் அரசியல் கட்சி, இன, மத, பிரதேச பேதமின்றி அனைத்துத் தரப்பினரையும் பங்குபெறுமாறு அழைக்கிறோம்’ என தெரிவித்துள்ளனர்.
