அமெரிக்கா இலங்கை மீது தாக்குதல் நடத்தும் என அஞ்சிய கோத்தபாய
விடுதலைப் புலிகளோடு ஏற்பட்ட யுத்தமும் அதன் அனுபவமும் கொண்ட நந்திக்கடலுக்கான பாதை என்னும் நூலினை எழுதி வெளியிட்டுள்ள கமால் குணரத்ன அந்த நூலினூடாக பல்வேறு இராணுவத் தகவல்களை குறிப்பிட்டு இருக்கிறார்.
குறித்த நூலில் அவர் கோத்தபாய ராஜபக்ச பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ‘2009 மே 16ஆம் திகதி தமிழீழ புலிகளை சுமார் 800 சதுர மீற்றருக்குள் அடைத்துக் கொண்டோம். பின்னர் புலிகள் மீதான எமது முதலாவது தாக்குதலை 17ஆம் திகதி மேற்கொண்டோம்.
தற்கொலைத் தாக்குதல் முயற்சியும் பிரபாகரனை காப்பாற்றும் திட்டமும்
நந்திக்கடல் களப்பின் வடக்கே இராணுவத்தின் 53ஆவது படைப்பிரிவு நிலைகொண்டிருந்தது. கிழக்கில், 58ஆவது படைப்பிரிவு நிலைகொண்டிருந்தது. மேற்காக, களப்பு காணப்பட்டது எனக்குறிப்பிட்டுள்ள அவர்,
மே மாதம் 17ஆம் திகதி அதிகாலை, நந்திக்கடல் களப்பிலிருந்து படகுகள் பல விரைந்து வந்தன. அவற்றில், ஆறு தற்கொலைத் தாக்குதல் படகுகள் காணப்பட்டன. அவை, தரையிலிருந்த எமது படைப்பிரிவு இருக்கும் திசைநோக்கி வந்து வெடித்துச் சிதறின.
எவ்வாறெனினும் எமது படையினர், விட்டுவைக்கவில்லை. எதிர்த் தாக்குதல்களை நடத்தினர். இதுவே, பிரபாகரனைக் காப்பாற்றுவதற்காக, புலிகளால் நடத்தப்பட்ட இறுதித் தாக்குதல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரபாகரன் தப்பியிருந்தால் ஆறுமாதம் தொடரும் போர்!
பிரபாகரனை காப்பாற்றும் முயற்சி அன்று வெற்றி பெற்று இருந்திருந்தால் புலிகளோடான போர் தொடர்ந்து மேலும் ஆறு மாதத்திற்கு நீடித்திருக்கும்.
எனினும் எமது படையினர் அந்த வேலியை தகர்த்தெறிந்து போரை முடிவுக்குக் கொண்டு வந்தனர். அத்தோடு பிரபாகரனை காப்பாற்றி மாங்குளம் காட்டுக்கு அழைத்துச் செல்லும் முயற்சியும் எம்மால் முறியடிக்கப்பட்டது.
ஏன் மாங்குளத்தை பிரபாகரன் தேர்வு செய்தார்?
விடுதலைப் புலிகள் மாங்குளத்தை தேர்வு செய்வதற்கான முக்கிய காரணத்தினை பின்னர் தான் அறிந்து கொண்டோம்.
மாங்குளம் காட்டுப் பகுதிகளில் புலிகள் தமக்கும் தேவையான ஆயதங்கள் உணவுப் பொருட்களை மறைத்து வைத்திருக்கின்றனர்.
இதனால் அவர்கள் மாங்குளத்திற்கு தப்பிச் சென்று அங்கிருந்து தமக்கான போரை ஆரம்பிப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டனர்.
இராணுவ கட்டுப்பாட்டுக்குள் ஊடுருவும் முயற்சி
போர் உக்கிரம் அடைந்து கொண்டு இருக்கையில் புலிகள் மக்களோடு மக்களாக இரவு வேளைகளில் இராணுவத்தினரின் பகுதிகளுக்குள் உட்புகுந்து கொள்வதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.
எனினும் நான் அந்த முயற்சிகளை முறியடிப்பதற்காக இரவு நேரங்களில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு எவரையும் அனுமதிக்க வேண்டாம் என உத்தரவு இட்டிருந்தேன்.
இதுவொரு புறமிருக்க அங்கிருந்தவர்களில் சிலர் குழப்படைந்த நிலையில் இராணுவ அதிகாரியொருவர், வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார். இதன்போது, மக்கள் மத்தியில் மறைந்திருந்த புலிகள், இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினர்.
புலிகளின் இந்த தாக்குதல் மூலம் இராணுவத்தினருக்கு சற்றுப் பின்னடைவு ஏற்பட்டிருந்தது. சுமார் 300 மீற்றர் நீளமான எமது பாதுகாப்பு வேலி உடைந்தது. அதனூடாக, புலிகள் வரத் தொடங்கினர்.
எனினும் பின்னால் நிலை நிறுத்தப்பட்டிருந்த படையினர் நடத்திய தாக்குதலினால் 18ஆம் திகதி அதிகாலையில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் கமால் குணரத்ன குறிப்பிட்டிருக்கிறார்.
சார்ள்ஸ் அன்ரனி மரணம்
17ம் திகதி இரவு முழுவதும் நடந்த கடும் மோதலின் போது அதிகாலை நிலமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தோம். அப்போது தான் பிரபாகரனின் மகள் சார்ள்ஸ் அன்ரனி கொல்லப்பட்ட விபரம் நமக்குத் தெரியவந்து. அவர் எம்மோடு நடந்த போரின் போது கொல்லப்பட்டார்.
வதந்தி.?
17ம் திகதி நடந்த உக்கிர மோதலின் போது காயமடைந்த இராணுவ வீரரை சிகிச்சை அளிப்பதற்காக படையினர் அவரை அம்புலன்ஸ் மூலமாக கொண்டு சென்றனர்.
ஆனால் புலிகள் அம்புலன்ஸ் மீதும் தாக்குதல் நடத்தத் தொடங்கினர். இதனால் புலிகள் மீதும் இராணுவத்தினர் தாக்கதல் தொடுத்தனர்.
இந்நிலையில் தான் அந்த வண்டி தீப்பற்றி எரிந்தது. ஆனால் பிரபாகரன் சென்ன வண்டி மீது தாக்குதல் நடத்தப்பட்டு அந்த வாகனம் எரிந்ததாகவும், அதில் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்றும் உலகம் முழவதும் வதந்தி பரவியது.
இந்நிலையில் இது தொடர்பாக அப்போது இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா தொடர்பு கொண்ட என்னிடம் கேட்டிருந்தார். எனினும் நடந்தவற்றை நான் அவருக்கு எடுத்துரைத்தேன்.
அமெரிக்காவிற்கு பயந்த கோத்தபாய
விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அமெரிக்கா இலங்கை மீது தாக்குதல் நடத்தக் கூடிய சாத்தியம் இருந்ததாக அப்போது கருதப்பட்டது.
காரணம் போரின் இறுதிக் காலத்தில், அமெரிக்கா உள்ளிட்ட பலம்வாய்ந்த பல நாடுகள், இலங்கை அரசாங்கத்துக்கு பாரிய அழுத்தங்களைக் கொடுத்தன.
இதனால் இலங்கை மீது அமெரிக்கா மூலமாக தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் அப்போது இருந்தது.
இதேவேளை மூன்றாம் தரப்பினரிடம், புலிகள் சரணடைய இடமளிக்க வேண்டு என்று மேற்குலக நாடுகள் கோரியிருந்தன.
ஆனால் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, தீர்க்கமானதொரு முடிவில் இருந்தார்.
இலங்கை இராணுவத்தினரிடத்தில் மட்டுமே விடுதலைப் புலிகள் சரணடைவதாக இருந்தால் சரணடைய வேண்டும். வேறு நாட்டு அனுசரனையுடன் சரணடைய முடியாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
ஆனால் அவரின் இந்த முடிவினால் அமெரிக்கா இலங்கை மீது கோபம் கொண்டு தாக்குதல் நடத்தக் கூடும். எனவே அவதானமாக இருக்குமாறு கோத்தபாய உத்தரவிட்டதாக அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
இதனால், சிறிலங்கா மீது அமெரிக்காவினால் தாக்குதல் நடத்தக்கூடும் என்று, அவர் எமக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதேவேளை சீனா இராணுவத் தளபதியும் என்னோடு தொடர்பு கொண்டு அமெரிக்காவின் தாக்குதல் தொடர்பில் எச்சரிக்கையை கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.
எனினும் இது தொடர்பில் இராணுவத்தினருக்கு அறிவிக்கவில்லை. ஆனால் அமெரிக்கா தாக்குதல் நடத்தும் சம்பவம் ஏதேனும் நிகழ்ந்தால் அதனை எதிர் கொள்வது தொடர்பில் நாம் ஆராய்ந்திருந்தோம்.
இந்த தகவல் சாதாரண படையினருக்கு அறிவிக்கப்படாமல் உயர்மட்ட இராணுவ அதிகாரிகளுக்கு மட்டும் தெரியப்படுத்தப்பட்டிருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.